03 October, 2012

என் தெய்வமே... தேவதையே... மோகினியே

என் மோகினிக்குப் பித்தவெடிப்புகள் மலர்ந்திருக்கின்றன
அதிலென் கனவினை இட்டு நிரப்புகிறேன்.
ஏனெனில் அவற்றிலிருந்து கவிதைகள் முளைக்கின்றன.
வழியும் மூன்றே மூன்று நரைமுடிகளில் 
பால் பௌர்ணமி இறங்கி வருகிறது
அதை வணங்கி ஆராதனை செய்கிறேன்.
ஏனெனில் அவற்றில் வெளிச்சம் பெறுகின்றன கண்கள்.
காற்றுக்கு அசையும் கூந்தல் கீற்றுகள் முன்
முழந்தாழிடுகிறேன்
அவைதாம் மனதை மேலெழும்பச் செய்கின்றன.
சரியும் சதையமுதங்களுக்கு என் இளமை சமர்ப்பணங்கள்
ஏனெனில் அவை குழந்தையாக்கி உறங்க வைக்கின்றன.
அவளருகே முத்தமாகிக் கிடந்த நான்
சுழன்றடிக்கும் அவள் வாசனையைப் பூசிக்கொண்டு
ருத்ரமூர்த்தியாக ஆடுகிறேன்.
என்னோடு சேர்ந்தாடுகிறது காதல்.
அவள் வதனத்தில் அரும்பியிருக்கும் பருவின் கூர்முனை ஏறி
உயிரைப் பலிபொருளாக்குகிறேன்.
அப்போது என் தெய்வமாகத் தரிசனமாகிறாள்.
என் தெய்வமே
என் தேவதையே
என் மோகினியே

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான சிந்தனை... ரசிக்க வைத்தது...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அசர வைத்த கவிதை.

வாழ்த்துக்கள் கதிர்.2012 உங்கள் ஆண்டு.பரவுங்கள் திசையெங்கும்.

manichudar blogspot.com said...

வாய்ப்பே இல்லை என்ன ஒரு வித்தியாசமான கலக்கல் கவிதை.

vasan said...

பித்த‌ வெடிப்பை க‌ழ‌னியாக்கி க‌விதை அறுப்ப‌வ‌ர்.
ந‌ரை முடியில் நிலாக் க‌திர் காண்ப‌வ‌ர்.
முன்னெற்றி கூந்த‌ல் ஆட்ட‌த்தில் த‌வ‌ம் செய்ப‌வ‌ர்.
அவ‌ளால் குழ‌ந்தையாகிப் பின் கூத்தனாகி,பித்தனாகிப்
பின் மாய்ந்து....கண்ட‌து, ப‌டைப்பு, காப்பு மூப்பு மூல‌த்தை.
க‌‌திர் பார‌தியுள், பார‌திக் க‌திர். வாழ்த்துக்க‌ள்.