12 July, 2013

நான்கு கால்களில் மூன்று பேர் நடனம்

சோழர்களின் சிற்பக்கலை உச்சத்தின் பிரம்மாண்டம் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் எனில், நுணுக்கத்தில் உச்சம் தாராச்சுரம் ஐராவதீஸ்வரர் கோயில். கோயிலின் ஒரு தூணைக் கூட வீணாக்காது சின்னதும் பெரிதுமாகக் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் சிற்பங்கள். இந்தியாவின் வேறெந்தக் கோயிலிலும் காணக் கிடைக்காத கல் அதிசயம் இது. சமதளத்தை விடச் சற்றே நான்கடி கீழிறங்கி இக்கோயிலைக் கட்டியவன் இரண்டாம் ராஜராஜன். காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு. முன்பு இக்கோயிலுக்குப் பெயர் இராஜராஜேஸ்வரம்.அதுதான் மருவி தாராசுமாகி இருக்கிறது. இக்கோயில் வளாகத்தைத் தோண்டத்தோண்ட, சிலைகளும் செப்புத் தகடுகளும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றனவாம். அப்படி எடுக்கப்பட்ட சிலைகளையும் செப்பேடுகளையும் கோயில் முதல் பிராகாரத்தின் இடதுபுறத்தை சிற்பக்கூடமாக்கிப் பாதுகாத்து வருகின்றனர். கோயில் முகப்பில் ஆரம்பித்து விமானச் சுற்றுச்சுவர் முழுக்க, பெரிய புராணக் காட்சிகள் சிற்பங்களாகக் காணக் கிடைக்கின்றன. சமணர்களைக் கழுவேற்றுவது முதல் பல சிவனடியார்களின் கதைகளைச் சிற்ப வடிவில் பார்க்கும்போது நமது ஆன் மிகத்தின் தொன்மம் புரிகிறது. விமானச் சுற்றுச் சுவரின் பின்புறத்தில், பிரம்மாண்ட லிங்கோத்பவர், அன்ன வடிவில் பிரம்மாவும், வராக வடிவில் திருமாலும் சிவனின் விஸ்வரூபத்தைக் காண முயற்சிக்கின்றனர்
சோழர் காலத்தில் செழிப்புற்றுத் திகழ்ந்த ஆடல்கலைகளை விளக்கும் சிற்பம் ஒன்று கலை ரசனைக்கு எடுத்துக்காட்டு. இரண்டு வாத்தியக் கலைஞர்களோடு ஒரு நடன மாது இணைந்து ஆடுகிறாள். ஆனால், கால்கள் மட்டும் நான்கு. @ர சிற்பத்தில் இடதுபுறமிருந்து பார்த்தால் காளை, வலதுபுறமிருந்து பார்த்தால் யானை, பிரசவ வேதனையோடு துடிக்கும் ஒரு தாயின் முகத்தில் படரும் வலியை எப்படித்தான் உளியில் செதுக்கினார்களோ... கோயில் மண்டபத்துக்கு ஏறிச் செல்லும் படியில் இரு பக்கமும் யானைகள், தேரை இழுத்துச் செல்லும் சிற்பத்தின் சக்கரங்கள்... இந்தியக் கலையின் அடையாளமாக உலகமெங்கும் உலவுகிறது. மிக தொன்மைவாய்ந்த சிற்பங்களை நேர்த்தியாகப் பராமரிக்கிறது யுனெஸ்கோ
எனினும் ராஜகோபுரத்தை காலம் சிதைத்துச் சிதிலமாக்கி இருப்பதை எப்போதும் போல நாம் நம் பண்பாட்டுச் சின்னங்களின் மீது காட்டும் அலட்சியத்தை உணர்த்துகிறது. எங்கிருந்தோ வந்து வெள்ளைக்காரர்கள் பார்த்து விட்டுச் சிலிர்க்கிறார்கள் தாராசுரத்தை. ஏழு கோடிக்கும் அதிகமான தமிழர்களில் எத்தனை பேர் பார்த்திருப்போம்?





2 comments:

ராமலக்ஷ்மி said...

சென்று பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது பகிர்வு. சிற்பங்கள் வெகு அழகு.

சட்டெனப் பார்க்கையில் உங்கள் தலைப்பின்படியே இருப்பினும், வாத்தியக் கலைஞர்கள் வெளிப்புறமாகத் திரும்பி நிற்பதால் முறையே அவர்களது ஒவ்வொரு காலும் சிற்பத்துக்குள் வராமல் போனது போலுள்ளதே. அதாவது புகைப்படத்தில் க்ராப் செய்வது போல இடம் இன்மையால் சிற்பி விட்டு விட்டதாய் தோன்றுகிறது:)! ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான புரிதலைத் தருவதும் சிற்பத்துக்கு சிறப்பே, கவிதையைப் போல.

'பரிவை' சே.குமார் said...

சிற்பங்கள் நமது கோவில்கள் எங்கும் காணக்கிடைத்தாலும் சிதைந்தவைகளை பாதுகாக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் சிறப்பானதாக இல்லை எனலாம்.

அழகர் கோவில் முன் மண்டபத்திலும் அருமையான சிற்பங்களைக் காணலாம்...

உங்கள் பகிர்வு அருமை....

ஊருக்கு வரும்போது தாராச்சுரம் போக முயற்சிக்கணும்.