15 July, 2013

கிளியோபாட்ரா கிரீடத்தில் கொற்கை முத்து

கொற்கை - பாண்டிய மன்னனின் துறைமுகத் தலை நகரம். கபாடபுரத்தை யும், பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோட்டையையும் கொடுங்கடலுக்குக் கொள்ளக் கொடுத்த பாண்டிய மன்னர்களுக்கு ஆசுவாசும் தந்த பூமி கொற்கை. கொற்கை துறைமுகத்து முத்துகள் கிளிதயாபட்ரா அரசியின் ராஜகிரீடத்தை அலங்கரித்ததாக வரலாற்றில் குறிப்புகள் உண்டு. பாண்டியன், தன் கப்பல் படைத்தளத்தை கொற்கை முத்துகளுக்குப் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தான் என்கிறது தமிழர் வரலாறு.
கடல் வணிகத்துக்காக பாண்டிய மன்னர்கள் நாணயங்கள் அச்சிட அக்ககச் சாலை ஒன்றையும் நிறுவியிருக்கிறார்கள் கொற்கையில். அப்படிப்பட்ட கொற்கை, இன்று பல் போன ஒரு பொக்கை வாயாக, ஒரு கடற்கரை கிராமமாகச் சுருங்கி, ஒடுங்கிக் கிடக்கிறது.
நான் சாயர்புரம், நடுவைக்குறிச்சியிலிருந்து வாழவல்லான் கிராமம் வழியாகத்தான் கொற்கைக்குள் நுழைந்தேன். பார்வைக்குப்பட்ட ஒரு மரத் தடியில் பேசிக்கொண்டிருந்த நான்கைந்து ஊர்ப் பெருசுகளிடம் விசாரித்தேன்.
கொற்கை துறைமுகம் எங்க இருக்கு?” -
நீ நிக்கறது நான் உட்கார்ந்திருக்கறது எல்லாம் தூர்ந்து போன கொற்கை துறைமுகத்து மேலதான்”
அவர் சுட்டிக்காட்டிய கிழக்குத் திசையில் சுற்றே தூர்ந்துபோன ஏரியின் சாயலில் இருந்த பள்ளம்தான் துறைமுகமாக இருந்த பகுதி. அதில் முளைத்திருந்த காட்டாமிணுக்கைச் செடிகளின் கும்பலில் பன்றிகளின் கொண்டாட்டம் ரணகளப்பட்டுக் கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த கட்டடத்தைக் காட்டி, “அது என்ன?” என்றேன்.
அது பொற்கை பாண்டியன் வழிபட்ட கண்ணகி கோயில். இப்ப அதுக்கு பேர் வெற்றிவேல் அம்மன்” என்றார்.
அதன் மதில்சுவற்றில் பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகளும், மீன் சின்னம் பொறித்த தூண்களும் காலத்துக்குச் சாட்சியாக இருந்தன.
பழைய காலத்து ஊராச்சேன்னு, “இங்க என்னங்க விசேஷம்”னு விசாரிச்சா “ஒரு மண்ணும் விசேஷமில்லை” என்றார் அவர். “மண்ணுக்குள்ளேர்ந்து நிறைய பொருட்கள்
தோண்டி எடுத்தாங்களாமே?” என்று விடவில்லை அவரை. அவர், “ஆமாமாம்... ரெண்டு மூணு பானையும், பத்து பதினைஞ்சு, அம்பு ஈட்டியும், எடுத்தாங்கன்னு சொன்னாங்க. நாங்க பார்க்கலை” என்றார். “கடல் எவ்வளவு தூரம்?” “அது இருக்கு ஆறு கிலோ மீட்டர்” என்றார் அலுப்புடன்.
முன்னொரு காலத்தில் கொற்கை வழியாக ஓடித்தான் வங்கக் கடலில் சங்கமித்திருக்கிறது தாமிரபரணி. காலமாற்றமும் கடல்கோள் மாற்றமும் கொற்கையைத் தூர்த்து விட்டு, கடலை இன்னும் கிழக்கு நோக்கி உள்ளிழுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், ஊருக்குள் எங்கு தோண்டினாலும் கடல் அலையடித்தற்கான சாட்சியாக, சுங்கு, சிப்பி, உப்பு மண் என கடல் சார்ந்த தடயங்கள் புதையலாகக் கிடைக்கின்றன. “இங்க தோண்டி எடுத்த பொருட்களை எங்க வெச்சிருக்காங்க” அந்தப் பெரியவரிடமே கேட்டேன். “கொஞ்சு நாள் இங்கதான் வெச்சிருந்தாங்க. அப்புறம் திருநெவேலிக்குக் கொண்டு போயிட்டாங்க” என்றவரிடம், “உங்க ஊர் முத்துகள் எகிப்து வரைக்கும் பேர் போனது தெரியுமா?” என்று கேட்டால், “பேர், புகழ், புண்ணியத்தை வெச்சுக்கிட்டு என்ன பண்ண? குடிக்க நல்ல தண்ணி கிடைக்கலையே” என்று அங்கலாய்த்தார்.
வேறொண்ணும் விசேஷம் இல்லையா?” என்று விடாமல் கேட்க, “வன்னி மரம் இருக்கு”
எங்கே?”
ஊருக்குள்ள போங்க. அங்கனகுள்ள ஒரு சுத்துணவுக்கூடம் வரும். அதுக்குப் பக்கத்துல இருக்கறதுதான் 2500 வருஷத்துக்கும் முன்னாடி உள்ள வன்னிமரம்னு, ஜீப் போட்டுக்கிட்டு வந்த ஆஃபீஸருங்க சொன்னாங்க. அங்க போங்க யாராச்சும் விவரம் சொல்வாங்க. நான் ஏரல் வரைக்கும் போகணும் நேரமாச்சு” என்று விடைபெற்றார்.


ஊருக்குள் காலத் தழும்புகளைத் தன் மேனியில் தாங்கிக்கொண்டபடி சாய்ந்து கிடந்தது ஒரு வன்னிமரம். வயசு 2000 வருஷத்துக்கும் மூத்ததாம். இப்போது அந்த மரத்தினடியில் பிள்ளையார் சிலையும், ஆஞ்நேயரும் அருள்பாலிக்கிறார்கள். பாண்டியன் ஆண்ட பூமி இன்று காந்ந்த கருவாடாகக் கிடக்கிறது. ஊரின் பெருமையைச் சொல்ல ஒரு அருங்காட்சியகமாவது அரசாங்கத்தின் சார்பில் அமைத்தால் கொற்கை குறித்த செய்தியாவது காற்றில் நிலைக்கும்!

No comments: