21 July, 2016

கவிஞர் அய்யப்பமாதவன்....

இரவைக் கடக்கத் தவிக்கும் கவிஞனின் மனம் பிரதிபலிக்கும் கவிதையிது. துன்புறுத்தும் இரவை அதன் படிமத்தை என்னவெல்லாமோ செய்து பார்க்கிறான் கவிஞன்.
பகல் எப்படியோ ஆதுரமானதுதான் யாவருக்கும். இரவுகள்தான் நம் யாவரையும் தேனீக்கள் போல் தீண்டி விசமேற்றுபவை. வாழ்ந்த வாழ்வின் நினைவுகளை ஒரு சேர கொணர்ந்து நம் வாழ்பவைக் கொல்பவைதான் இந்த இராவுகள்.
நம்மைப்போலவேதான் இந்தக் கவிஞனும். இரவு வருவதை விரும்பாதவன் இரவைச் சந்தித்தே ஆகவேண்டிய நிர்பந்தத்தில் இரவை அதன் குணாதிசயத்தை எரியூட்டுகிறான். கிழித்தெறிகிறான். இது கவிஞனுக்கு மட்டுமே சாத்தியம். சாதாரண மனிதன் இரவு தரும் பெரும் அழுத்தத்தில் உறக்கமற்று நிம்மதியிழக்கிறான்.
கவிஞனோ நம் கற்பனை வழி ரெளத்திரத்தின் அறத்தின் வழி இரவு என்கிற வாதையை வார்த்தைகளால் சபித்துவிட்டு பகலைக் காதலியின் விரல்கள் போல பற்றத் துடிக்கிறான்.
இரவென்பது சாபமெனில் பகலென்பது விமோசனம் நமக்கும் இந்தக் கவிஞனுக்கும்கூட இல்லையா.
கதிர்பாரதி இன்றைய கவிஞர்களில் மிக முக்கியமானவரென்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.
வாழ்த்துகள் தம்பி. உன்னைக் கண்டு பொறமைப்படுகிறவர்கள்தான் உன்னை மிகச் சிறந்த கவிஞனாக உன்னை உலகிற்குத் தெரிவித்துக்கொண்டே இருப்பார்கள். காலரைத் தூக்கிவிட்டு பெருமைப் பட்டுக்கொள். நீ கவிதைகளால் ஆனவன்.
பகலென விரலைப் பற்றினேன்
கொடும்வாதையான நேற்றைய இரவிலிருந்து
தப்பி வந்தவனில் நானொருவன்
என்னவெல்லாமோ செய்தேன்
மெழுகுவர்த்தியை உயிர்ப்பித்து இரவை எரித்தேன்
மின்விசிறியைச் சுழலவிட்டுக் கிழித்தேன்
போர்வைக்குள் புதைந்து இரவிலிருந்து எனைத் துண்டித்தேன்
தகித்த இரவின் தலையில் வாளி நீரைக் கொட்டினேன்
வேட்டையாடும் கண்கள் வாய்த்திருந்தன இரவுக்கு
கொய்யென மொய்க்கும் தேனீக்களின் கொடுக்குகளால்
ஆனது என்றும்கூடச் சொல்லலாம்
விடியலின் பொன்கீற்றொன்று துளைக்க
உன் விரலெனப் பற்றிக்கொண்டேன்
ஆம்
என் மார்பு கேசம் கோதும்
உன் விரலெனப் பற்றிக்கொண்டேன்
இத்துணை ஆதுரமானதா உன் விரல்
இத்துணை ஆதூரமானதா உன் பகல்.
கதிர் பாரதி
( ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் தொகுப்பிலிருந்து... )

1 comment:

'பரிவை' சே.குமார் said...

நல்லா எழுதியிருக்கிறார்...